Thekkathi ponnu serial 500th day celebration --- பாலசந்தர், பாரதிராஜாவுக்கு கருணாநிதி கோரிக்கை

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmBQxmMAssH4KgG2pth0jYN08GMbzCpD6yQIuQ6jrUm-mJVGIod0YPtBwP6eHpNmhjwxM_yILQFRROQ-n78Oxga28_JKv-BFTFxmbs8YsbhT3fD5r1yMQXpokfgKlzCVFVlH3ITluyd8XF/s400/Rettaisuzhi-Stills-015.jpg
தமிழகத்தின் பல்வேறு வட்டாரங்களின் நிலையை சொல்லும் தொடர்களை பாரதிராஜாவும், பாலசந்தரும் இயக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கோரிக்கை வைத்துள்ளார். கலைஞர் டி.வி.,யில் ஒளிபரப்பாகி வரும் தெக்கத்தி பொண்ணு தொடரின் 500வது நாள் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு தெக்கத்தி பொண்ணு டைரக்டர் பாரதிராஜா மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கி பேசியதாவது:

இந்த தொடரை 500 நாட்கள் முழுமையாக நாள் தவறாமல் நான் பார்த்தவனல்ல; ஏறத்தாழ 300 நாட்களாவது இந்த தொடரை நான் பார்த்திருக்கிறேன். நான் பார்த்த தொடர்களில் அதிக நாட்கள் பார்த்த தொடர் இந்த "தெக்கித்தி பொண்ணு'' தான். இந்த அருமையான ஓவியம் - தமிழ்நாட்டு மக்களுடைய மனத்திரையிலே பதிகின்ற அளவுக்கு, இன்னமும் வராதா என்ற ஏக்கத்தை எழுப்புகின்ற அளவுக்கு, இந்த ஒரு நல்ல நிகழ்ச்சியிலே நம்மையெல்லாம் சந்திக்க வைத்திருக்கிறது.

பாரதி ராஜா என்ற இந்த தம்பி மீது இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக ஒரு அன்பு, பாசம் உண்டு. பாரதிராஜாவுக்கும் கலை உலகத்திலே உள்ள சிலருக்கும் - அல்லது கலை உலகத்திலே இல்லாத சிலருக்கும் ஏற்படுகின்ற கசப்புகள் - அதன் காரணமாக உருவாகின்ற நிலைமைகள் - இவை எல்லாம் வரும்போதுகூட - நான் பாரதிராஜாவுக்காக பரிந்து பேசும்போது - தமிழகத்தில், கலையுலகத்தில் ஒரு தமிழன் கொடி கட்டிப் பறப்பது சில பேருக்கு பிடிக்கவில்லை, அதனால் இதெல்லாம் நடைபெறுகிறது என்று சொல்லியிருக்கிறேன். அப்போது எனக்கும் அவருக்கும் நெருக்கமான நட்பு ஒன்றும் கிடையாது.

தெக்கித்தி மண்ணின் வாசனை வீசுகின்ற தொடர்கள் தம்பி பாரதிராஜாவால் இந்த தொலைக்காட்சிகளில், தொடர்ந்து வர வேண்டும். அது அந்தந்த பகுதிகளின் - வட்டாரத்தின் - நிலைப்பாடுகளை - அங்கே இருப்பவர்களின் நாகரிகத்தை நினைவூட்டுகின்ற வகையிலே பண்பாடுகளை ஞாபகப்படுத்துகின்ற வகையிலே-அதன் அடிப்படையிலே அறிவுரைகளை வழங்குகின்ற வகையிலே பல தொடர்கள் தம்பி பாரதிராஜா அவர்களால் வரவேண்டும். பாரதி தன்னை நண்பராக - இந்த துறைக்கு தன்னை அறிமுகப்படுத்தியவராக கருதி மரியாதை காட்டுகின்ற இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களும் இது போன்ற அந்தந்த வட்டாரத்தின் நிலைமைகளை சொல்லுகின்ற அளவிற்கு தொடர்களை உருவாக்கித் தர வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்து, தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன், காந்தி கிராம பல்கலைக்கழக துணைவேந்தர் கோகிலா தங்கசாமி, டைரக்டர் கே.பாக்யராஜ், நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் `அபிராமி' ராமநாதன், திண்டுக்கல் லியோனி, படஅதிபர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், ஏவி.எம்.சரவணன், `சத்யஜோதி' தியாகராஜன், கே.ஆர்.ஜி, நடிகைகள் தேவயானி, ரோஜா உள்ளிட்‌ேசைர் கலந்து கொண்டனர்.

Comments

Most Recent