சென்னை, பிப்.5:'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை திரையி...
சென்னை, பிப்.5:'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தை திரையிடுவதற்குத் தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் சோழர் பேரவையின் தலைவர் டி.வி.கே.அழகிரி தாக்கல் செய்த மனு விவரம்:தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் தமிழர்களின் தனி அரசை அமைத்தார்.குடி ஆட்சி, கிராம நீதிமன்றங்கள், நீர்ப் பாசனத்துக்கு 'கல்லணை', தஞ்சை பெரிய கோயில் என அவரது ஆட்சியில் ஏராளமான சாதனைகள் செய்யப்பட்டன.அதேபோல், முதலாவது நூற்றாண்டில் அமைந்த சோழர் ஆட்சியில் வெளிநாடுகளுடன் வாணிகத் தொடர்பு உள்ளிட்டவை இருந்துள்ளன. சோழர்களின் ஆட்சிக் காலத்தைப் 'பொற்காலம்' என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.இந்த நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் சோழர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனர். அரசனுக்காக மனித உயிர்ப் பலி அளிப்பது போலவும் காட்டப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தின் தொடக்கத்தில் இது ஒரு கற்பனைக் கதை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், படத்தில் சரித்திரக் காலப் பெயர்களே இடம்பெற்றுள்ளன.இதனால், அவை உண்மையானது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் சோழ அரசர்களைப் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கும்.எனவே, இந்தப் படத்தை திரையிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும். அதற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.நீதிபதி மணிவாசகன் முன்னிலையில் இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுதொடர்பாக பிப்ரவரி 17-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கிரீன் வாலி தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Comments
Post a Comment