HTML clipboard மக்களின் நம்பிக்கையை வைத்து லாபகரமாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்காட்சி சானல்கள...
தொலைக்காட்சி சானல்களைப் பார்த்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டும். காலையில்
எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைகளைப் பள்ளிக்கோ கல்லூரிக்கோ தயார் செய்து
அனுப்பிவிட்டுக் கணவரை அலுவலகத்திற்குப் புறப்படச் செய்வதற்குள்
குடும்பத்தலைவிகளுக்கு போதும் போதுமென்றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட
நேரம் இருப்பதில்லை என்பதால், தொலைக்காட்சியின் பக்கம் கவனம் செலுத்துவது என்கிற
பேச்சுக்கே இடமில்லை. அதனால்தான் பெரும்பாலான சானல்களில் ஆன்மிகம்,
செய்திகள் போன்ற அனைவருக்கும் பொதுவான நிகழ்ச்சிகள் அந்த நேரத்தைப் பங்குபோட்டுக்
கொள்கின்றன.
இந்தக் காலைநேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்காட்சியைத்
திருப்பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குதலைத் தொடங்குகின்றன நமது
சானல்கள். பொதுவாக, ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை
குடும்பத் தலைவிகளுக்கு இருப்பதுண்டு. இந்தக் கவலையைத் தங்களுக்குச் சாதகமாகப்
பயன்படுத்தி, அவர்களது அறியாமையையும் நம்பிக்கையையும் காசாக்க முயல்கின்றன சில
வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீரவேண்டுமா? இந்தக் கல்லை வாங்குங்கள்,
அந்தக் கவசத்தை வாங்குங்கள் என்று சானல்களில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்பிக்கை
வியாபாரம். காசு ஒன்றே குறி என்கிற உன்னதமான குறிக்கோளோடு, கண்ணை மூடிக்கொண்டு
சானல்களும் இதற்குத் துணை போவது கொடுமையிலும் கொடுமை!
விஜய் தொலைக்காட்சியில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்காக வரும்
நகைக்கடைக்காரர், போகரின் பாஷாணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு
தங்கமாக மாறுவது (தெரிந்தால் இவரே தங்கம் தயாரிக்க வேண்டியதுதானே!) என்பது
போன்ற ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்புப்படுத்திப்
பேசியும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்யூச்சராலஜி, நியூமராலஜி என்று
ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறியும், ஏற்கெனவே குழப்பத்தில் இருப்பவர்களை மேலும்
குழப்பத்தில் ஆழ்த்தினார்.
உங்கள் ஜாதகத்துடன் நகைக்கடைக்குள் செல்வது, மாஸ்டர் செக்கப்பிற்காக
மருத்துவமனைக்குச் செல்வதைப் போன்றது என்று தனது வியாபாரத்திற்கு வலு சேர்க்கும்
இவர் சொல்ல வருவது என்னவென்றால், 'எங்கள் கடையில், நாங்கள் கூறும் ரத்தினக்
கற்களை வாங்கி அணியுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்' என்பதுதான்.
கல் ஒன்று, மாங்காய் இரண்டு என்பது பழமொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த
நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்துகொண்ட புதுமொழி!
அதிர்ஷ்டக்கல் வியாபாரி தனது வியாபாரத்தை முடித்துவிட்டுச் சென்றவுடன்
அந்த இடத்தை விரைந்து நிரப்புகிறார் கடவுள் பெயரில் கவச விற்பனை செய்யும் சாமியார்
வேடமிட்ட ஒரு வியாபாரி. செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்கிய வாழ்வு
ஆகியவற்றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலிருந்து காப்பது, வழக்குகளில் வெற்றி
பெற வைப்பது போன்ற உப பலன்களையும் நல்குகிறதாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன
ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவனிக்க). குழந்தைகளுக்குப் பள்ளிக் கட்டணம் கூடக்
கட்ட முடியாத நிலையில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்கிய பின்னர் (கவசம்
வாங்க மட்டும் காசு எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை!) செல்வச் செழிப்பில்
திளைப்பதாகப் பேட்டியும் உண்டு.
இதைத் தொடர்ந்து - கண் திருஷ்டியிலிருந்து காக்கும் மெகா சுரக்ஷா
கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளிலும் குரானிலும் கூடக் குறிப்பிடப்பட்டிருப்பதாகக்
கூறித் தங்கள் வியாபாரத்திற்கு வலு சேர்த்தார்கள் இந்நிகழ்ச்சியில். கல்யாணமாகாத
பெண்கள் இதை வாங்கினால் உடனே திருமணம் நிச்சயமாகுமாம் (பலனடைந்தவரின் பேட்டியும்
உண்டு). இத்தனைக்குப் பிறகும் நீங்கள் ஏமாளியாகாமல் இருந்தால் ஆச்சரியம்தான்!
மக்கள் தொலைக்காட்சிப் பக்கம் போனால், 'உங்களைச் சொட்டை, வழுக்கை,
கிரிக்கெட் கிரவுண்டு என்று கிண்டல் செய்கிறார்களா? கவலைப்பட வேண்டாம், எங்களுக்கு
போன் செய்யுங்கள்' என்று அழைத்துக்கொண்டிருந்தார் ஒருவர். ஏதோ காவல்துறையினரின்
அறிவிப்பு இது என்று நினைத்தால், அது உங்கள் தவறு. குறிப்பிட்ட தைலத்தை வாங்கிப்
பூசினால், இத்தகைய கிண்டல் பேச்சுகளிலிருந்து தப்பும் அளவிற்கு உங்கள் சொட்டை,
வழுக்கையெல்லாம் மறைந்து முடி கருகருவென்று வளருமாம். மக்களின் பலவீனங்களில்
இதுவும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க முயல்பவர்களுக்கு உதவிக்கொண்டிருந்தது மக்கள்
தொலைக்காட்சி. நீங்களுமா?
மெகா தொலைக்காட்சியிலோ, கருப்பானவர்களைச் சிவப்பாக மாற்றும் மந்திரக்
களிம்பு விற்பனை... அந்தக்கால முனிவர்களின் கடுமையான உழைப்பின் பலனாம் இது (முனிவர்கள்
இதற்காகத்தான் கடுந்தவம் புரிந்தார்கள் போலிருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப்
பெரும்பாலான சானல்களை ஆக்கிரமித்துள்ள இந்த வியாபார வில்லங்கங்கள் எவ்வளவு
விபரீதமானவை என்பது பற்றி யாருக்கென்ன கவலை? Magical remedy பற்றி விளம்பரம்
செய்யக் கூடாது என்று, ஏதோ விதி இருப்பதாக, எப்போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்!
அப்படி ஏதாவது இருக்கும் பட்சத்தில், அந்த விதி எங்கே தூங்கிக்கொண்டிருக்கிறது
என்பதைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு அறிவிக்கலாம்!
கல், தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கைகள் ஒருபுறம் என்றால், பங்குச்சந்தை
மீதான நம்பிக்கை மறுபுறம். இந்த நம்பிக்கையைப் பங்குபோட்டுக்கொண்டு விற்பதிலும்
சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்படும் (கலைஞர்), வளாகம் (மக்கள்), வர்த்தக
உலகம் (சன் நியூஸ்), மார்க்கெட் டிப்ஸ் (ஜெயா பிளஸ்) என்று எல்லாச் சானல்களிலும்
ஏதாவது ஒரு வடிவில் நுழைந்து விடுகிறது பங்குச்சந்தை.
எந்தப் பங்கை வாங்கலாம்? என்ன விலைக்கு வாங்கலாம்? சந்தை ஏறுமா, இறங்குமா?
என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளிக்கக் காத்திருக்கிறார்கள் பங்குச் சந்தை
வல்லுனர்கள். குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வது போல இவர்கள் கொடுக்கும் பரிந்துரையை
நம்பி, பங்குச் சந்தையில் பணம் போடுபவர்களைப் பார்த்துப் பரிதாபப்படாமல்
வேறென்ன செய்ய? பங்குச்சந்தையையும் பரிந்துரைகளையும் நம்புவோர் இருக்கும் வரை,
இந்நிகழ்ச்சிகளை வழங்கும் சானல்களின் வியாபாரம் அமோகம்தான்!
எல்லா நம்பிக்கைகளும் ஏதோ ஒருவகையில் வியாபாரமாகிக் கொண்டிருக்க,
ஜனநாயகத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையும் வியாபாரமாகிக் கொண்டிருந்ததைச்
செய்திகளில் பார்க்க முடிந்தது. வாக்காளர்களுக்கு மதுபானம், வேட்டி சட்டை
வழங்கப்பட்டதை ஒரு சானலில் பார்த்த அதிர்ச்சி அடங்கும் முன்னரே, வாக்காளர்களுக்கு
வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்றொரு
சானலில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்களும் சேர்ந்து செய்த தேர்தல் வியாபாரமும்,
நேயர்களின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதே என்பதைச் சொல்லத் தேவையில்லை.
என்றேனும் ஒருநாள், இவையெல்லாம் மாறக்கூடும்... நம்பிக்கை
வியாபாரிகளிடம் சிக்காத நாள் கூட வரலாம்... நம்புங்கள்...!

Comments
Post a Comment