தமிழ் பேசிஅசத்தும் ஐஸ்!



மணிரத்னம் இயக்கும் ராவண் படத்தின் தமிழ் பதிப்புக்கு தனது சொந்தக் குரலையே தரப்போகிறாராம் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்.

மணிரத்னத்தின் ராவண் படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாகத் தயாராகிறது.

இந்த மூன்றிலுமே ஐஸ்வர்யாதான் நாயகி. ஆனால் நாயகர்கள் மட்டும் வேறு வேறு.

ஏகப்பட்ட சோதனைகளைத் தாண்டி ஒருவழியாக இப்போதுதான் இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது படப்பிடிப்பு.

தமிழில் அசோகவனம் என்ற பெயரில் தயாராகும் இந்தப் படத்தில், முதலில் ஐஸ்வர்யா ராய்க்கு குரல் கொடுப்பதாக இருந்தவர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ்.

ஆனால் பின்னர் இந்த முடிவை மாற்றிக் கொண்டாராம் மணி ரத்னம். காரணம்... வேறொன்றுமி்ல்லை, ஐஸ்வர்யா ராயே அட்டகாசமாக தமிழ் பேசத் தயாராகிவிட்டதுதானாம்.

படப்பிடிப்பில் உதவி இயக்குனர்களிடம் தமிழிலேயே பேசி அசத்தும், ஐஸின் தமிழ் உச்சரிப்பு அசல் தமிழ் நடிகைகளை விட நன்றாக உள்ளதாம்.

தமிழ் படிக்கத் தெரியாமலிருந்த ஐஸ்வர்யாவுக்கு இப்போது எழுதப் படிக்கவும் கற்றுத் தருகிறார்களாம்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்ற எண்ணத்தில், படத்தின் டப்பிங்கை ஐஸே பண்ணட்டும் என்று கூறிவிட்டாராம் மணி.

அப்படியெனில் எந்திரனிலும் சொந்தக் குரல்தானா?

Comments

Most Recent