'பண்டோரா போல ஒரு கிரகம் இல்லையே...': ஏக்கத்தில் புலம்பும் ரசிகர்கள்!



'ஜேம்ஸ் கேமரூன் ஒரு மனிதரே இல்லை... அவர் கடவுளுக்கு நிகரான படைப்பாளி. இவர் படைத்த பண்டோரா கிரகம் போல ஒரு கிரகத்தில் வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தில் செத்துப் போகலாம் போல உள்ளது...!'

-அவதார் திரைப்படம் எப்படி உள்ளது என்ற ஒரே ஒரு கேள்வியுடன் முன்னெடுக்கப்பட்ட சர்வேக்கு உலகம் முழுவதிலுமிருந்து குவிந்த பதில்களிலிருந்து ஒரு சாம்பிள்தான் நீங்கள் மேலே படித்தது.

மனித உறவுகளின் உன்னதம், மனித நேயம், இயற்கையோடு இயைந்த வாழ்க்கை... இவைதான் கேமரூன் எனும் படைப்பாளி தன் படைப்புகளின் அடித்தளமாய் வைத்திருக்கும் விஷயங்கள்.

இதுவரை அவர் உருவாக்கிய எல்லா படங்களிலும் இந்த ஆகக் சிறந்த அம்சங்களே பிரதானமாய் நின்றதை உணரலாம். வெறுமனே பணம் பண்ணும் சினிமா வியாபாரியாக இல்லாமல், எப்போதும் படைப்பின் மேன்மையையும், அது மக்களுக்கு எந்த அளவு பயனுள்ளதாய் இருக்க வேண்டும் என்ற கேள்வியையும் மனதுக்குள் சிந்திப்பவராக கேமரூன் திகழ்கிறார்.

அவதார் படத்தை இந்த நூற்றாண்டின் சிறந்த 10 படங்களுள் முதன்மையானது என்கின்றன மேற்கத்திய மீடியா. அதை ஒப்புக் கொள்வதில் எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்பதை தங்களது அபாரமான ஆதரவு மூலம் காட்டி வருகின்றன கீழை நாடுகளும்.

சீனா, ஆஸ்திரேலியா, பாராகுவே போன்ற நாடுகளில் 15 நாட்கள் கழித்து இந்தப் படத்தை வெளியிட்டனர். சீனாவில் மட்டும் முதல் நாள் வசூல் 41 மில்லியன் டாலர்கள் (பாக்ஸ்ஆபீஸ் மஜோ). இதுவரை சீன திரைப்பட வரலாறு காணாத தொகையாம் இது!

ஆஸ்திரேலியாவிலும், ஜப்பானிலும், பராகுவேயிலும் இதே நிலைதான். ஆஸ்திரியாவிலும், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அவதார் தவிர வேறு படங்களுக்கே மக்கள் போவதில்லையோ என்று கேட்கும் அளவு குவிகிறதாம் கூட்டம்.

இன்னொரு பக்கம், இந்தப் படம் வெளியாகி 5 வாரங்கள் கழிந்த பின்னும் தொடர்ந்து சர்வதேச பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 1.4 பில்லியன் டாலர்களைக் குவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவதார் ஏன் உங்களுக்குப் பிடித்திருக்கிறது?

இந்த நிலையில், கேமரூனின் அவதார் படம் உங்களுக்குப் பிடித்துப் போன காரணம் என்ன? அந்தப் படம் உங்களுக்குள் ஏற்படுத்திய பாதிப்பைச் சொல்லுங்கள் என உலகம் முழுக்க ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது. அவதார் பேரம்ஸ் என்ற அமைப்பு மூலம் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டது.

இந்த கேள்விக்கு பலரும் பலவித பாஸிடிவ் பதில்களை அனுப்பியிருந்தனர். சிலர் குறை சொல்லியும் கடிதம் எழுதியிருந்தனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சொன்ன பதில்தான் முதல் பாராவில் நீங்கள் படித்தது.

"இப்படி ஒரு கிரகத்தில், இவ்வளவு நல்ல படைப்புகளுக்கு மத்தியில் வாழ முடியாமல் போய்விட்டதே என்ற ஏக்கமே எங்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுகிறது" என பலர் உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளது, கேமரூன் என்ற படைப்பாளிக்கு கிடைத்த பிரமாண்ட வெற்றி.

"மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாது என்பதை, அருமையாக உணர்த்தியிருக்கிறார் கேமரூன். இந்த பூமியும் கூட ஒரு காலத்தில் பண்டோரா போல அற்புதமாகத்தானே இருந்திருக்க வேண்டும். அதைக் கெடுத்தது யார்.. வேற்று கிரகவாசிகளா... இல்லை, மனிதர்களே. மனிதர்களுக்குள் உள்ள பேதங்களே அப்படி சீரழித்துவிட்டது. இந்தப் படம் பார்த்த போது என் கண் முன்னே, பண்டோராவும், அழிந்து கொண்டிருக்கும் பூமியும் இணை காட்சிகளாய்த் தெரிந்தன. என் மனம் அழுதது!" - எமிலி என்ற பெண்மணி இப்படி கூறியுள்ளார்.

ஒரு நல்ல படைப்பு ஏற்படுத்தக்கூடிய தாக்கம் இதுதான்!

Comments

Most Recent