பொங்களோ... பொங்கள்... டமிள் பொங்கள்..!


இந்த வாரம் பொங்கலும் தொலைக்காட்சியும் என்று ஒரு புத்தகமே போடலாம். அந்த அளவுக்கு தொலைக்காட்சிச் சானல்கள் திகட்டத் திகட்ட நேயர்களுக்குப் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கின. தை மகள் எங்கள் தமிழ் மகள் என்கிற புஷ்பவனம் குப்புசாமி தம்பதியினரின் கிராமியப் பாடலுடன் பொதிகையின் பொங்கல் தொடங்கியது. தை பொறந்தா, தங்க மக தை பொறந்தா என தைத்திங்களை வரவேற்றும், பொங்கல் திருநாள் வந்ததுவே, பொங்கிடும் இன்பம் தந்ததுவே என பொங்கல் சிறப்பையும் உற்சாகமாக அவர்கள் பாடியதைப் பார்த்த நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொண்டது. ஒரு சிறிய இசைப்பெட்டியின் உதவியுடன் தாரை, தப்பட்டை, தமுக்கு, மத்தளம் என அனைத்து வகை கிராமிய இசைக்கருவிகளின் ஒலிகளையும் கலந்து கொடுத்தார்கள். இசையை மட்டும் வேண்டுமானால் அந்தச் சிறு பெட்டிக்குள் அடைத்து நகரத்துக்குக் கொண்டு வந்துவிடலாம். ஆனால் அந்த இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர்களது உணர்வுகளை எப்படிக் கொண்டுவர முடியும். இருப்பினும் ஆலை இல்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பதைப் போல, கிராமிய மணமே இல்லாத பொங்கலுக்கு கிராமிய இசையுடன் கூடிய பாடல்களைக் கொண்டுவந்த புஷ்பவனம் குப்புசாமிக்கும் பொதிகைக்கும் நன்றிகூற வேண்டியது அவசியமாகிறது.

ஜெயா தொலைக்காட்சியின்  பாட்டு பொங்க பாட்டு  நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களுடன் கிராமத்திற்கே சென்று பொங்கல் வைத்தார்கள். மக்கள் தொலைக்காட்சியில் இரண்டு பெண்கள் தைப்பாட்டு பாடி உழவர் திருநாளை வரவேற்றனர். பாடல்கள் கிராம மணம் கமழ இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் பாடியவர்கள் அணிந்திருந்த பளபளக்கும் பட்டாடையும் கைகளில் வைத்திருந்த பயிரும் அரிவாளும் பொருந்தவில்லையே! கதிர்விடாத பச்சைப் பயிரையும் கதிரறுக்கும் அரிவாளையும் வைத்துக்கொண்டு அவர்கள் என்ன சொல்ல வந்தார்கள் களை பறிக்கிறோம் என்றா இல்லை, கதிர் அறுக்கிறோம் என்றா நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாமா?

சன் தொலைக்காட்சியில் பொங்கல் செய்வது எப்படி என்று நமீதாவுக்குக் கற்றுக்கொடுக்கக் கடும் பிரயத்தனம் செய்துகொண்டிருந்தார் சமையல்கலை வல்லுநர் ஜேக்கப். பொங்கல் மச்சான் பொங்கல் நிகழ்ச்சியில் நமீதா முழு உடையணிந்திருந்தார் என்பதை நேயர்களுக்குச் சொல்லியே ஆகவேண்டும். பொங்கலில்

சேர்ப்பதற்கு  diet ghee இல்லையா என்ற நமீதாவின் கேள்வியில் அதிர்ந்து போனார் ஜேக்கப். மயக்கம் போடாத குறையாக அப்படி ஒன்றை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறி ஒருவழியாகச் சமாளித்தார்.

ஒருவழியாகப் பொங்கல் வைத்து முடித்தவுடன் அதை ஸ்பூனில் எடுத்து அனைவரும் சியர்ஸ் சொல்லிச் சாப்பிட்டார்கள். நிகழ்ச்சியின் முடிவில் தன்னைத் திருமணம் செய்துகொள்ள propose செய்யுமாறு தமிழ்நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் நமீதா விடுத்த அழைப்பிற்கு நிச்சயமாகப் பலன் கிட்டியிருக்கும் என நம்புகிறோம்.

மற்ற சானல்களெல்லாம் இப்படி பொங்கலைத் தங்கள் விருப்பப்படி கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒருமணி நேரம் நெப்போலியனின் நெடும்பேட்டி ஒளிபரப்பானது. பொங்கலன்று காலை எழுந்தவுடன் யாராவது ஒரு மணி நேரத்துக்கு உட்கார்ந்து ஒரு பேட்டியைப் பார்ப்பார்களா? வீட்டில் வேறு வேலையிருக்காது. சந்தித்த வேளையில் இதுபற்றிச் சிந்திக்கவேயில்லையோ?

ஜெயா தொலைக்காட்சிக்குத் திரும்பினால் அங்கு கனவு தேவதையாகத் தொடைவரை உடையணிந்து நமீதா கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டிருந்தார். தமிழர் திருநாளாம் பொங்கலில் நமீதாவின் ஆங்கிலப் பேட்டியைச் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப

Comments

Most Recent