'சுறா' படப்பிடிப்பில் மீனவர்களுக்கு விருந்தளித்த விஜய்!



பொதுவாக மீனவர் பகுதியில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமான காரியம். ஆனால் அவர்களின் மனதுக்குப் பிடித்த நடிகர்கள் படங்களுக்கு அந்த சிரமம் சிக்கல் வந்ததில்லை. அப்படித்தான் விஜய்யின் சுறா படத்துக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறார்களாம் மீனவர்கள்.

விஜய்யின் சுறா படம் இப்போது சென்னை தொடங்கி புதுவை வரை கடற்கரையோரங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

சங்கிலி முருகன் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். படுவேகமாக 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகவே படப்பிடிப்பை முடித்துள்ளார் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். இதில் மீனவ மக்களின் ஒத்துழைப்பும் கணிசமாக உண்டாம்.

மீனவர்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டும் வகையில் படத்தின் பல காட்சிகள் உள்ளனவாம்.

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் விஜய் அந்த ஊர் மக்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் செவ்வாய்க்கிழமை மதியம் விருந்து கொடுத்தார். மீனவ மக்களுடன் அவரும் உட்கார்ந்து சாப்பிட்டார்.

புதுச்சேரி மாநில விஜய் தலைமை நற்பணி மன்றத்தின் தலைவரும் எம்எல்ஏவுமான என்.ஆனந்து உடனிருந்தார்.

இந்த ஊரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட சிலர் கூறுகையில், "இந்த விருந்தை நாங்கள் பொங்கல் விருந்தாகக் கருதுகிறோம்" என்றனர்.

விஜய்யைப் பார்க்கவும், அவருடன் உட்கார்ந்து சாப்பிடவும் முதியோர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என்று சுமார் 2 ஆயிரம் பேர் திரண்டனர். விருந்துக்கு வந்தவர்கள் அழைத்து அமர வைத்து, நடிகர் விஜய்யே ஒவ்வொருக்கும் பரிமாறினார்.

விருந்தின் போது அவர் பேசுகையில், "சுறா படம் கடலோர பகுதி மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கும். அந்தப் படத்தில் நான் நடிப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

கடந்த ஒருவாரமாக இங்கு ஷூட்டிங் நடக்கும்போது இரவு நேரத்திலும் பலர் வந்து எங்கள் வீட்டில் சாப்பிடுங்கள் என்று கூறிக் கொண்டே இருந்தார்கள். ஷூட்டிங் முடிவதற்கு இரவு 2 மணிக்கு மேலாகிறது. அதற்கு மேல் யாருக்கும் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று கருதிதான் உங்கள் அனைவருடனும் சாப்பிட ஆசைப்பட்டு இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தேன். ஒத்துழைப்புக்கு நன்றி" என்றார்.

அனுமந்தை குப்பம் மீனவர் பஞ்சாயத்தின் துணைத் தலைவர் சுந்தர் கூறுகையில், "இந்தப் படம் எடுக்க செட் போட ஆரம்பித்ததில் இருந்து நாங்கள் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்து வருகிறோம்.

ஊர் மக்களைக் கூட்டி படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து எந்தப் பொருளையும் எடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதித்தோம். அந்த வகையில் மக்களும் ஒத்துழைப்புக் கொடுத்து வருகிறார்கள். இந்தப் படம் மீனவர்களின் கதை. எங்கள் ஊரில் அது படமாவது பெருமையாக இருக்கிறது" என்றார்.

Comments

Most Recent