தீவிரவாதத்துக்கு பயன்படும் திருட்டு விசிடி பணம்!- கமல்



திருட்டு விசிடி விற்ற பணம் நல்ல காரியத்துக்கு போகாது. தீவிரவாதம் போன்ற தேச விரோத காரியங்களுக்குதான் பயன்படும் என்றார் கமல்ஹாஸன்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்துள்ள ‘ஜக்குபாய்’ திரைப்படம் திரைக்கு வராத நிலையில் இன்டர்நெட்டில் வெளியாகி அதன் மூலம் திருட்டு சிடியாக வெளி வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று நடந்த திரையுலகினர் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பிரஸ் மீட்டில் பங்கேற்ற கமல்ஹாஸன் பேசியதாவது:

படம் வெளிவராத நிலையில் ஜக்குபாய் சிடி வெளியானது குறித்து எல்லோரும் துக்கம் விசாரிப்பதால் இழவு வீடு போல இருப்பதாக இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வேதனையோடு குறிப்பிட்டார். இது இழவு வீடு அல்ல, அப்படி அவர் நினைக்க வேண்டாம். திருட்டு விசிடி தயாரிப்பு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. நான் உட்பட இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

திருட்டு வி.சி.டி. வந்துவிட்ட இந்த நிலையில் ஜக்குபாய் படத்தை விரைவில் தியேட்டருக்கு கொண்டு வருவதுதான் அவசர காரியம். எனது விக்ரம் படம் வந்தபோது ஒருவரைப் பிடித்தனர். அவர் மறுநாளே வெளியே வந்துவிட்டார். இது போன்றவர்களை எப்படி திருத்த முடியும்?.

என்னுடைய ஹேராம் சி.டி. பர்மா பஜாரில் எப்படி விற்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சாராய கடைகள் திறந்தும் கள்ளச்சாராயச் சாவுகள் நடக்கின்றன. குறைந்த விலையில் வி.சி.டி. விற்றால் மக்களும் வாங்க தயாராக உள்ளனர்.

திருட்டு விசிடியை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்று எல்லோரும் பேசினர். இந்த தொழிலில் ஈடுபடுபவர்களும், இதை பார்ப்பவர்களும் மனம் வருந்த செய்ய வேண்டும் என்று கூறினார். ஆனால் அது சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன். இருப்பினும் திருட்டு விசிடிக்கு எதிராக உண்மையிலேயே நெஞ்சை சுடும் வகையில் ஒன்றை சொல்ல முடியும்.

திருட்டு வி.சி.டி. மூலம் கிடைக்கும் பணமெல்லாம் மும்பை நட்சத்திர ஹோட்டல்களில் நடந்த குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதை மக்களிடம் சொல்ல வேண்டும். உங்கள் பணத்தில் குண்டுகள் தயாரிக்கப்படுகிறது. அது உங்கள் தலையிலேயே விழும் என்று எச்சரிக்க வேண்டும்.

திருட்டு விசிடி தயாரிப்பில் ஈடுபடுபவர்கள் அதற்கான பணத்தை காசோலையாக கொடுப்பதில்லை. இது முழுவதும் கருப்பு பணம். இதில் ஒரு பகுதி தீவிரவாதிகளுக்கு சென்றடைகிறது. எங்காவது குண்டு வெடிக்கும்போது அதில் திருட்டு விசிடி மூலம் கிடைத்த பணமும் இருக்கிறது என்பதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.

தேச துரோக காரியங்களுக்கு இந்த பணம் போவதை உணர்த்த வேண்டும். இதை இப்படியே விடக் கூடாது. சட்ட திட்டங்களை அழுத்தமாக உருவாக்க வேண்டும். தவறு நடைபெறும் வழிகளை தடுக்க வேண்டும். அடுத்து வருகிற படங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஜக்குபாய் படத்திற்கு இதை ஒரு விளம்பரமாகவே எடுத்து கொள்ள வேண்டும். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் கமல்.

Comments

Most Recent