ஜக்குபாய் பார்த்தார் முதல்வர் கருணாநிதி!



சரத்குமார்-ஸ்ரேயா நடிப்பில், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ஜக்குபாய் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.

படம் சிறப்பாக வந்திருப்பதாக சரத்குமார் மற்றும் படக்குழுவினரையும் பாராட்டினார்.

ஜக்குபாய் படம் எப்போதோ எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் வாங்க ஆளில்லாததால் இதோ அதோ என்று வெளியாக போக்குக் காட்டி வந்தது. இந்த நிலையில் அந்தப் படத்தின் டெக்னீஷியன்கள் பலருக்கு சம்பள பாக்கி வைத்துவிட்டதாகப் புகார் எழுந்தது.

இந்தநிலையில், படம் தியேட்டர்களில் திரையிடுவதற்கு முன்பே இணையதளங்களிலும், திருட்டு வி.சி.டி.யாகவும் வெளியிடப்பட்டது.

இதை வைத்தே பரிதாபம் தேடிக்கொள்ள முயன்ற சரத்- ராதிகா அண்ட் கோ, முடிந்த வரை இந்த விவகாரத்தை பெரிதாக்கியது. அதற்கு ரஜினிகாந்தையும் துணைக்கழைத்துக் கொண்டது.

முதல்வரைச் சந்தித்து திருட்டு விசிடி விற்போர், வைத்திருப்போர், பார்ப்போர் எல்லோர் மீதும் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று வற்புறுத்த, அடுத்த நிமிடமே அதைச் சட்டமாகவும் அறிவித்துவிட்டார் முதல்வர் கருணாநிதி.

இந் நிலையில், 'ஜக்குபாய்' திரைப்படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சரத்குமார். இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியை முதல்வர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பார்த்தார்.

இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் திரையரங்கில் அவருக்கென சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஜக்குபாய் படத்தை கலைஞர் டிவிதான் வாங்கி வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Comments

Most Recent