ஜெயம் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு இந்தி என வலம் வந்த சதா, இடையில் தமிழ்ப்படங்கள் எதிலும் தலைகாட்டவில்லை. இடையில் அவர் அளித்த பேட்ட...
ஜெயம் படத்தில் அறிமுகமாகி தமிழ் தெலுங்கு இந்தி என வலம் வந்த சதா, இடையில் தமிழ்ப்படங்கள் எதிலும் தலைகாட்டவில்லை.
இடையில் அவர் அளித்த பேட்டிகளில் கூட, தமிழில் நல்ல பாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிப்பேன் என்று கூறிவந்தார்.
தற்போது பி வாசு இயக்கத்தில், ஆர்கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப் பிறகு பி வாசு தமிழில் இயக்கும் படம் புலிவேஷம். இடையில் கன்னடத்தில் அவர் இயக்கிய ஆப்தரக்ஷகா சக்கைப்போடு போடுவது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் அவன் செயல், அழகர் மலை ஆகிய வெற்றி ரேஸுக்குப் பிறகு தயாரித்து கதாநாயகனாக புலிவேஷத்தில் நடிக்கிறார் ஆர்கே.
புலிவேஷத்தில் கிராமத்துக்கும் நகரத்துக்கும் என இரண்டு கதாநாயகிகள்.
இதில் கிராமத்துக்கென கேரளாவிலிருந்து திவ்யா விஸ்வநாத் என்ற புதுமுகத்தை பிடித்துள்ளார் வாசு. நகரத்து நாயகி வேடத்தில் சதா நடிக்கிறாராம்.
இதுபற்றி சதா கூறுகையில், "அந்நியன், உன்னாலே உன்னாலே படங்களுக்குப் பிறகு நான் எடுத்துக் கொண்ட காலகட்டம் அதிகம் என்றாலும், நடித்தால் சிறந்த கேரக்டரில் நடிப்பது... இல்லாவிட்டால் நடிக்காமலேயே இருந்துவிடுவது என்ற முடிவில் இருந்தேன். இந்தப் படங்களுக்குப் பிறகு இடைவெளி சற்று அதிகமாகி விட்டது.
இந்த இடைவெளியில் இரண்டு இந்திப் படங்கள் முடித்து விட்டேன். தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் கதாபாத்திரங்கள் சரி இல்லாததால் மறுத்து வந்திருக்கிறேன்.
வாசு சார் இதற்கு முன் இரு படங்களில் நடிக்கக் கேட்டும் சந்தர்ப்ப சூழ்நிலையால் என்னால் நடிக்க முடியாமல் போனது. அந்தக் குறையும் இந்தப் படம் மூலம் நீங்கி விட்டது.
விரைவில் புலிவேஷத்துடன் என்னைப் பார்க்கலாம்...", என்றார் சதா.
Comments
Post a Comment