Goundamani refuses to give interview to leading channel

http://thatstamil.oneindia.in/img/2010/04/13-gondamanii200.jpg
மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பார்கள்... இந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ... கவுண்டமணிக்கு முழுசாகப் பொருந்தும்.

உடல் நலக் கோளாறுகள், இருதய அறுவைச் சிகிச்சை என மரணத்தின் வாசல்வரை போய் நலமுடன் மீண்டு வீடு திரும்பியுள்ளார் கவுண்டர்.

தனக்கு தெரிந்த பத்திரிகையாளர்களை அவ்வப்போது அழைத்து அவர்களுடன் ஜாலியாக அரட்டை அடிப்பது கவுண்டமணியின் நீண்ட நாள் வழக்கம். ஆனால் அங்கே பேசியதில் ஒன்று கூட எழுத்தாக வந்துவிடக் கூடாது என்ற நிபந்தனையையும் முதலிலேயே அவர் போட்டு விடுவதால், யாரும் தப்பித் தவறிக் கூட எழுதுவதில்லை.

இன்னொன்று யாருக்கும் பத்திரிகை-டிவி பேட்டி தருவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார், பல ஆண்டுகளாக. நெம்பர் ஒன் பத்திரிகைகள், டிவிக்கள் எவ்வளவோ முயன்றும் அவரது பேட்டியை வாங்க முடியவில்லை.

இந்த நிலையில், உடல் நலம் தேறி வந்திருக்கும் கவுண்டமணியிடம் சிறப்புப் பேட்டி வேண்டும் எனக் கேட்டு, தமிழகத்தின் பவர்புல் முன்னணி டிவி ஒன்று அணுகியுள்ளது.

ஆனால் கவுண்டரோ பேட்டி தர மறுத்துவிட்டாராம். நான் நடித்த நகைச்சுவைக் காட்சிகளைத்தான் திரும்பத் திரும்ப போட்டு கல்லா கட்டுறீங்களே... அப்புறம் பேட்டி எதுக்கு என திருப்பிக் கேட்டாராம்.

சேனலின் தலைமையே போன் பண்ணி பேசியபோதும் மசியவில்லையாம் கவுண்டர். நீங்க யாருன்னு நல்லா தெரிஞ்சிதான் இந்த பதிலைச் சொல்றேன் என்று கவுண்டர் போனை வைத்துவிட, சேனல் நிர்வாகம் மகா கடுப்பில் உள்ளதாம்...

அடுத்த நாள் தனக்கு வேண்டிய ஒரு நிருபரிடம் கவுண்டர் இப்படிச் சொன்னாராம்: "எனக்கு அவங்க தயவு ஏதும் வேணாம்பா... இருக்கிற காலம் வரை என்னோட தயவு வேணும்னா அவங்களுக்கு தேவைப்படும்.."

அட்ரா சக்கை, அட்ரா சக்கை!

Comments

Most Recent