Accident: Vijaykanth son's car attacked by public | விபத்து-விஜயகாந்த் மகன் காரை வழிமறித்து தாக்குதல்

http://thatstamil.oneindia.in/img/2010/05/25-vijayakanth1-200.jpg
சென்னை: வேன் மீது மோதிய விஜய்காந்தின் மகன் பிரபாகரன் சென்ற காரை பொது மக்கள் வழிமறித்துத் தாக்கினர். தேமுதிகவினர் விரைந்து வந்து அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

தாம்பரத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் ஊழியர்கள் 10 பேர் நேற்று வேலை முடிந்து வேனில் கூடுவாஞ்சேரி சென்றனர். வண்டலூர் பூங்கா அருகே ஊரப்பாக்கம் சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் வேனின் வலதுபுரத்தில் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது.

இதில் ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்த மோகன், கிருஷ்ணகுமார், பிரியா, கோகிலா ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து வேன் டிரைவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தந்தார். அவர்கள் ரோட்டை மறித்து பைக்குகளை நிறுத்தி காத்திருந்தனர்.

அப்போது அந்த கார் அங்கு வந்தவுடன் அதை மடக்கினர். கண்ணாடிகளை அடித்து நொறுக்கிய அவர்கள் டிரைவரை வெளியே இழுத்துப் போட்டு அடித்து உதைத்தனர்.

காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த 20 வயது வாலிபர், தாக்கியவர்களிடம் சென்று, நான் தேமுதிக தலைவர்- நடிகர் விஜயகாந்ததின் மகன் பிரபாகரன். தெரியாமல் இந்த விபத்து நடந்து விட்டது என்று சமாதானப்படுத்தினார்.

ஆனால் அவர்கள் யாரும் அதை நம்பவில்லை. இதையடுத்து தனது வீட்டுக்கு பிரபாகரன் தகவல் தரவே, அப் பகுதி தேமுதிக செயலாளர் கரீமுக்கு தகவல் தரப்பட்டு அவர் கட்சியினருடன் விரைந்து வந்தார்.
அவர் வந்து சமாதானப்படுத்திய பின்னரே தாக்கியவர்கள் கலைந்து சென்றனர். பிரபாகரனையும் டிரைவரையும் காரையும் மீட்டு பத்தரமாக அனுப்பி வைத்தார் கரீம்.

இந்த சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Comments

Most Recent