சோ, ஜெயலலிதாவின் சக மாணவர் வி.சி.குகநாதன்!




எம்.ஜி.ஆரின் 'மலைக் கள்ளன்' படம்தான் வி.சி.குகநாதனின் சிறு வயது மனதில் சினிமா கல்லை தூக்கி போட்டிருக்கிறது.​ பின் மெட்ராஸ் நாட்டிய சங்கம் பள்ளியில் சேர்ந்து சினிமா பயின்றிருக்கிறார்.​ சோ,​​ ஸ்ரீகாந்த்,​​ ஜெயலலிதா ஆகியோர் வி.சி.குகநாதனின் சக மாணவர்கள்.​

'அணையா விளக்கு',​ 'டே ட்ரீம்',​ 'எது அன்பு' உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நாடகங்களை அப்போதே நடத்தியிருக்கிறார்.​ வி.சி.குகநாதன் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதுதான் எம்.ஜி.ஆரை சந்தித்தார்.​ ​

''பின்னாளில் என்னவாகப் போகிறாய்'' என எம்.ஜி.ஆர்.​ கேட்க ''சினிமாவுக்கு கதை எழுத வேண்டும்'' என வி.சி.சொல்ல,​​ எனக்கொரு கதை எழுது என்று சொல்லி விட்டுச் சென்றாராம் எம்.ஜி.ஆர்.​ பின் எம்.ஜி.ஆருக்காக வி.சி.குகநாதன் எழுதிய கதைதான் 'புதிய பூமி'.​ பின் 'குமரிக் கோட்டம்' என விரிந்திருக்கிறது அவரது சினிமா கனவு.​ 272 படங்களுக்கு எழுத்தாளர்,​​ 57 படங்களுக்கு இயக்குநர்,​​ 51 படங்களுக்கு தயாரிப்பாளர் என நீள்கிறது வி.சி.யின் சாதனைப் பட்டியல்.​ வி.சி.குகநாதன் தயாரித்த 'ராஜபார்ட் ரங்கதுரை' படத்தை பார்த்த காமராஜர் ''இது மாதிரி நல்ல சினிமாவா எடு தம்பி'' என வி.சி.யின் முதுகில் தட்டிக் கொடுத்திருக்கிறார்.​ தற்போது தமிழக பெப்ஸி அமைப்புக்கு வி.சி.குகநாதன் பத்தாவது தலைவர்.

Comments

Most Recent