சரண்யா மோகன் தற்போது விளம்பரங்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது சரண்யா மோகனை. ''தமிழில் சினிமா வாய்ப்புகள் இல்லை என்பது உண...
சரண்யா மோகன்
தற்போது விளம்பரங்களில் மட்டுமே அதிகமாக பார்க்க முடிகிறது சரண்யா மோகனை. ''தமிழில் சினிமா வாய்ப்புகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் மலையாளத்தில் பிஸியாக இருக்கிறேன். தமிழில் கிராமத்துப் படங்களில் மட்டுமே நடிக்க அழைக்கிறார்கள். தொடர்ந்து கிராமத்துப் படங்களை செய்ய ஆர்வமில்லை. அதனால்தான் விளம்பரங்களில் அதிகமாக நடிக்கிறேன்'' என்கிறார் சரண்யா மோகன்.
மெட்ராஸ் டாக்கீஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ராவணன்' படத்துக்கான விளம்பரங்கள் தற்போது இந்தியா முழுவதும் 27 சேனல்களில் உலா வருகிறதாம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இப்படத்தின் புரோமோஷனுக்காக இந்தியாவின் சில முக்கிய நகரங்களை விக்ரம், அபிஷேக், ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட படக்குழுவினர் சுற்றி வரவும் முடிவெடுத்து உள்ளார்களாம். மணிரத்னமும் இந்தக் குழுவில் உண்டாம்.
செங்குத்தான மலைகளையும், ஆழமான பள்ளத்தாக்குகளையும், உயர்ந்த பீடபூமிகளையும் கொண்டது போர்னியோ தீவு. எளிதில் நுழைய முடியாத நிலபரப்பு, ஆராயப்படாத பிரசேதம், சில பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அபூர்வ விலங்குகள் என திக் திக் நிமிடங்களில் பயணிக்கிறது டிஸ்கவரியின் 'எக்ஸ்பிடிஷன் போர்னியோ' நிகழ்ச்சி. ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
காதல் சச்சரவுகள், திருமண வதந்திகள் என மீடியா வெளிச்சத்தில் இருந்து மறைந்து இருந்த நயன்தாரா சமீபகாலமாக மீடியாவின் பார்வையில் தென்படுகிறார். இதற்கு திருமணத்தைப் பற்றிய வதந்திகள் முடிவுக்கு வந்து விட்டதுதான் காரணமாம். பல பிரச்னைகளால் முகத்தின் பழைய பொலிவு போய் விட்டது என நண்பர்கள் அட்வைஸ் செய்ய கேரளத்தின் மூலிகை மருத்துவத்தின் மூலம் முக அழகைக் கூட்டவும் முடிவெடுத்திருக்கிறாராம்.
கோடைக் கால சிறப்புத் திரைப்படங்களில் 'ஹேண்ட் ஆப் டெத்', 'ஹியர்லஸ் ஹைனா', 'டிராகன் லார்ட்' உள்ளிட்ட புகழ் பெற்ற ஆங்கில சினிமாக்களை வரும் நாள்களில் ஒளிபரப்ப போகிறது விஜய் டி.வி. மே மாதம் முழுவதும் ஒளிபரப்பாகிற இந்த திரைப்படத் திருவிழாவில் ஜாக்கிசான் படங்களுக்குத்தான் முக்கியத்துவம் இருக்குமாம். சில ஹிட்டடித்த பழைய ஹிந்தி படங்களையும் கையில் வைத்திருக்கிறதாம் விஜய் டி.வி. நிர்வாகம்.
தி.மு.க. பிரமுகராகிவிட்ட குஷ்பூவின் 'ஜாக்பாட்' மற்றும் 'கல்கி' தொடரை நிறுத்தி விட்டது ஜெயா டி.வி. நிர்வாகம். இந்த மாதம் நடக்கவிருந்த ஜாக்பாட்டின் 400-வது வார பிரம்மாண்ட நிகழ்ச்சி உள்ளிட்ட பல திட்டங்களை ரத்து செய்திருக்கிறது. குஷ்பூவுக்கு பதிலாக மற்றொமொரு நடிகையை களம் இறக்க பேச்சு வார்த்தையிலும் இறங்கியிருக்கிறது. நடிகை தேர்வில் தற்போது மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் நடிகைக்குதான் வாய்ப்பு இருக்குமாம்.
முன்னாள் சின்னத்திரை நடிகர் சங்கத்தலைவர் நடிகர் வசந்த்தின் நினைவு தினத்தையொட்டி கடந்த 14-ம் தேதி அனைத்து சீரியல் ஷூட்டிங்குகளையும் நிறுத்தி அஞ்சலி செலுத்தியது சின்னத்திரை கூட்டமைப்பு. இதையடுத்து விரைவில் உருவாக்கப்பட இருக்கும் திரைப்பட நகரில் அவரின் குடும்பத்துக்கு ஒரு வீடு ஒதுக்கி, அதற்கான செலவுகளையும் சின்னத்திரை நடிகர்களே ஏற்கவும் உள்ளார்களாம்.
ஏழு கண்டங்களைப் பற்றி விரிவான பார்வையை வழங்கி வருகிறது அனிமல் பிளானட் சேனலின் 'ஓசோன்ஸ்' நிகழ்ச்சி. கண்டங்களின் பருவ நிலை மாறுபாடுகள், விலங்குகள், தாவர வகைகள், மனிதர்களின் இயல்பான வாழ்க்கையின் மாறுபாடுகள் என அனைத்தையும் படம் பிடித்து காட்டுகிறது. அட்லாண்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான அனைத்து கண்டங்களையும் வியாழக்கிழமை தோறும் காலை 10 மணிக்கு படம் பிடிக்கிறது இந்த நிகழ்ச்சி.
சிம்ரன் தயாரிக்க இருக்கும் முதல் தமிழ் சீரியலில் நடிக்க இருப்பது நடிகை கஸ்தூரிதானாம். சீரியல் தயாரிப்புக்கான நடிகைகள் பட்டியலில் கஸ்தூரியை சிலர் சிபாரிசு செய்ய அவரையையே டிக் அடித்திருக்கிறாராம் சிம்ரன். முட்டுக்காடு பகுதியில் பிரமாண்ட பங்களா இறுதிக் கட்ட பணிகளை அடைந்திருக்கிறது. இதற்கு பின் இந்த சீரியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பமாகிறதாம். இதற்காக சில சேனல்களிடம் நேரம் வாங்கும் பணியும் தொடங்கி விட்டது.

Comments
Post a Comment