சிறந்த நாவல்களை படமாக்க இயக்குனர்கள் முன்வரவேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்...
சிறந்த நாவல்களை படமாக்க இயக்குனர்கள் முன்வரவேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். கவுதமன் ஹீரோவாக நடித்து, இயக்கும் படம் 'மகிழ்ச்சி'. அதிர்வு திரைப்பட்டறைக்காக மணிவண்ணன் தயாரிக்கிறார். இப்படம் பற்றி கமல்ஹாசன் பேசிய வீடியோ நிருபர்கள் சந்திப்பில் திரையிடப்பட்டது. அதில் கமல்ஹாசன் கூறியதாவது:
தலைசிறந்த நாவல்களில் ஒன்று, 'தலைமுறைகள்'. இது 'மகிழ்ச்சி' என்ற பெயரில் படமாக உருவாகிறது. பல வருடங்களாக சினிமாவை சார்ந்து இலக்கியத்தை நேசிப்பவர்கள், என்னைப் போன்றவர்கள் நிறைய பேர். தமிழ் சினிமாவிற்கும், இலக்கியத்திற்கும் ஏற்பட்டுள்ள அகண்ட இடைவெளிக்குப் பாலமாக அமைய வேண்டும் என்று, முப்பது வருடங்களுக்கு முன் கோபமாகப் பேசிய இளைஞர்களில் நானும் ஒருவன். இன்றும் அதே நிலை தொடர்கிறது. அப்படிப்பட்ட இந்த வறண்ட சூழ்நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள், புதிய சுழற்சியின் ஆரம்பம்.
எப்படிப்பட்ட தமிழ் சினிமாவை உருவாக்க வேண்டும், எத்தகைய அஸ்திவாரங்களுடன் அவை அடியெடுத்து வைக்க வேண்டும் என்ற கனவுகளுடன் இருந்த தமிழ் சினிமா ரசிகர்களில் நானும் ஒருவன். நீல.பத்மநாபன் பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியது ஒருவிதமான சோகம்தான். ஆனால், அதுதான் இன்றைய சினிமாவின் நிலை. அவரைப்போன்ற எழுத்தாளர்கள் தமிழ் திரையுலகிற்கு என்றோ வந்திருக்க வேண்டும். 'இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் அவருடைய நாவலைப் படமாக்கினீர்களா?' என்று கேட்கலாம். அத்தனை தடங்கல் எனக்கே இருக்கும்போது, கவுதமன் தைரியமாக இந்த இலக்கியத்தை எடுத்துள்ளார். சிறந்த நாவல்களை படமாக்க இயக்குனர்கள் முன் வரவேண்டும்.
Comments
Post a Comment