ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ராகவேந்திரா 'யார் என்றே எனக்கு தெரியாது' என்று நடிகை சினேகா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க சாட்ச...
ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ராகவேந்திரா 'யார் என்றே எனக்கு தெரியாது' என்று நடிகை சினேகா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கண்ணீர் மல்க சாட்சியளித்தார். நடிகை சினேகாவுக்கு கடந்த 2008ம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த ராகவேந்திரா(35) என்பவர் தன்னை திருமணம் செய்ய வலியுறுத்தி செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சினேகா சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் புகார் செய்தார். ராகவேந்திராவை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சைதாப்பேட்டை 11வது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை சினேகா, அவரது அப்பா ராஜாராம், அம்மா பத்மாவதி, அக்கா சங்கீதா, அவரது கணவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜான் ஆகியோர் நேரில் ஆஜராகி சாட்சியளித்தனர்.நீதிபதி முன்பு நடிகை சினேகா அளித்த சாட்சி:2008ம் ஆண்டு தி.நகரில் உள்ள எனது வீட்டில் இருந்த போது, ராகவேந்திரா என்பவர் எனது தந்தையை சந்தித்து 'ஆட்டோகிராப் பார்ட்&2' என்ற படம் எடுக்க போவதாக கூறியுள்ளார். அப்பா அவரை திருப்பி அனுப்பிவிட்டார். இதையடுத்து, எனது செல்போனுக்கு தொடர்ந்து ராகவேந்திரா எஸ்எம்எஸ் அனுப்பினார். அதில், தன்னை திருமணம் செய்யுமாறு கூறினார். நாட்கள் ஆக ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பி டார்ச்சர் செய்தார். ஒரு நாளைக்கு 50மிஸ்டு காலும், 20 எஸ்எம்ஸ் வரை அனுப்பினார்.இதனால் எனது செல்போன் எண்ணை மாற்றினேன். அந்த எண்ணையும் தெரிந்து கொண்டு எஸ்எம்எஸ் அனுப்பினார். ஆனால் நேரில் வரமாட்டார். 2008 மார்ச்சில் 'முரட்டுக்காளை' பட சூட்டிங்கிற்காக குற்றாலத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தேன்.
அப்போது தன்னை திருமணம் செய்யாவிட்டால் நடப்பதே வேறு என எனது அப்பாவுக்கு மிரட்டல் விடுத்து எஸ்எம்எஸ் அனுப்பினார். பின்னர் 'கோவா' படசூட்டிங் சென்னை விமான நிலையத்துக்கு எதிரே நடந்த போது, 'உன்னை திருமணம் செய்வேன் இல்லாவிட்டால் முத்தம் கொடுப்பேன்' என்று எஸ்எம்எஸ் அனுப்பினார். நான் செல்போனை எடுக்கவில்லை என்றால் 'உனது குடும்பத்தை தொலைத்து விடுவேன்' என்று மிரட்டல் எஸ்எம்எஸ் அனுப்புவார்.இந்த வழக்கில் அவர் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த பின்பு மீண்டும் தொந்தரவு செய்தார். இந்த பிரச்னையால் எனது குடும்பமே நீதிமன்றத்துக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனிப்பட்ட முறையில் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்று அழுது கொண்டே சினேகா கூறினார். சாட்சிகளை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஸ்ரீராம் வழக்கு விசாரணையை அக்டோபர் 8ம்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
விசாரணையின் போது வந்த எஸ்எம்எஸ்
நடிகை சினேகா நீதிபதி முன்பு 2மணி நேரம் கண்ணீர் மல்க சாட்சியளித்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதை ராகவேந்திரா தான் இப்போதும் அனுப்பியுள்ளார் என நீதிபதியிடம் செல்போனை காட்டினார். அதை நீதிபதி படித்தார். இதற்கு ராகவேந்திரா தரப்பு வக்கீல் அழகுசுந்தரம் புது ஆதாரங்களை இப்போது பதிவு செய்யக் கூடாது என ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து குறுக்கு விசாரணையின் போது இந்த ஆதாரத்தை பதிவு செய்யுமாறு நீதிபதி கூறினார்.
Source: Dinakaran
Comments
Post a Comment