நெருங்கிய நண்பர்கள் யாரும் இல்லை: இளையராஜா

சென்னை,​​ ஜன.11: நெருங்கிய நண்பர்கள் என யாரும் இல்லை என்றார் இசையமைப்பாளர் இளையராஜா.

சென்னை எம்.ஓ.பி.​ வைஷ்ணவா கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற "பொங்கல் திருவிழா'வில் பங்கேற்று மாணவிகளுடன் தனது கடந்த காலம் மற்றும் இசை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

என் நண்பன்...

இசையும் காற்றைப் போல் தான்.​ எப்போதும் நம்முடன் கலந்திருக்கிறது.​ காற்றை காற்றிலிருந்து பிரிக்க முடியுமா?​ 1968}ம் ஆண்டு சென்னை வந்ததிலிருந்து இன்று வரை நெருங்கிய நண்பன் என யாரும் இல்லை.​ ஆர்மோனியப் பெட்டிதான் என் நெருங்கிய,​​ உயிர் நண்பன்.​ இந்தப் பெட்டியோடுதான் நான் பேசி வருகிறேன்.​ எப்பொழுதும் ஆர்மோனியப் பெட்டிதான் என் கூடவே வருகிறது.​ "பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்...' என்ற பாடல் வரி கிடைக்க அதற்கு உருவம் கிடைத்த நேரம் அதிகாலை 3.

​​

புதுமை...​ ​

பாடல் கேட்டு வருபவர்கள் அந்த படத்தில் வந்தது மாதிரி.​ இந்த பாடல் என்று குறிப்பிட்டுதான் கேட்கிறார்கள்.​ "புதுமையாக வேண்டும்' என யாரும் கேட்பதில்லை.​ 787 படங்கள் முடித்தாகி விட்டது.​ எந்த இயக்குநரும் என்னிடம் புதுமையை நோக்கி வரவில்லை.

ரமண மகரிஷி...​ ​

தன் 16 வயதில் அனைத்தையும் துறந்து,​​ யாரும் இல்லாமல் வேறு உலகத்துக்கு போனவர்.​ அனைத்தையும் துறந்து,​​ ​ "தண்ணீரில் இறங்கி குளிக்கும் போது எந்த தண்ணீர் வந்து இந்த உடலை சுத்தப்படுத்தி விடப் போகிறது.​ இந்த உடலுக்கு குலம்,​​ ஜாதி என என்ன இருக்கிறது' என நினைத்தவர்.​ ரிஷிதான் என்னைப் பிடித்து இயங்க வைக்கிறார்.​ உடலில் இருக்கும் ஒவ்வொரு புலன்களுக்கும் இன்பம் இருக்கிறது.​ அறிவின் இன்பம் எது என்பதை அறிந்தவர் ரமண மகரிஷி.​ "அன்னக்கிளி'யின் பாடல்கள் ஹிட்டாகும் என எனக்குத் தெரியாது.​ அதற்கு இறைவன்தான் காரணம்.

​​

இன்றும் கற்கிறேன்...​ ​

மதுரை வைகை அணை கட்டுகையில் கூலி வேலை செய்தபோது பாடிய பாடல்களிலிருந்து,​​ தேவாரம் பள்ளியில் பாடியதில்...அண்ணன் பாவலருடன் திருவெறும்பூரில் பாடிய மாநாட்டு பாடல்...​ என வாழ்க்கையில் ஆயிரம் விஷயங்கள்.​ சென்னை வரும் போது சங்கீத பாஷைகள் எதுவும் தெரியாது.​ இப்போதும் எதுவும் தெரியாது.​ இசையைப் பற்றி தெரியாமல் இருப்பதால்தான் இன்றும் கற்கிறேன்.

இசை பல்கலைக்கழகம்...​ ​

இந்திய இசையின் உருவம் வேறு.​ மேற்கத்திய இசையின் உருவம் வேறு.​ உலகத்தில் காலம்தான் பிரமாண்டமானது என சொல்லுவேன்.​ ஒரு நொடியையும்,​​ மற்றொரு நொடியையும் பிரிக்க முடியாது.​ எல்லாவற்றையும் காலம்தான் சேர்த்து வைக்கிறது.​ சில குறிப்பிட்ட இசைகளால் எல்லாம் ​ முடிந்து விடவில்லை.​ சில காலக் கட்டங்களில் உலக இசை மேதைகளை பற்றி தெரிந்துகொள்ள அவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சென்றிருக்கிறேன்.​ சுற்றிப் பார்த்திருக்கிறேன்.​ இசை மேதை பீத்தோவனின் பியானோவை தொட்டுப் பார்த்திருக்கிறேன்.​ ஆனால் நம் முன்னோர்களின் இசைக் கருவிகள் எங்கே போனது.​ இது பற்றி முதல்வரிடமும் பேசியிருக்கிறேன்.​ இசைப் பல்கலைக்கழகம் பற்றியும் பேசியிருக்கிறோம்.​ இருப்பதை உங்களுக்கு தந்து விட்டு போக வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.

Comments

Most Recent