ஆதரவாளர்களை திரட்டி அஜீத் வீட்டை முற்றுகையிடுவேன்: ஜாக்குவார் தங்கம்


அஜீத் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தனது ஆதரவாளர்களை திரட்டி, அஜீத் வீட்டை முற்றுகையிடுவேன் என்று ஜாக்குவார் தங்கம் கூறியுள்ளார்.
கலைஞருக்கு நடந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் பேசிய அஜீத்தின் கருத்துகளுக்கு, கண்டனம் தெரிவித்த ஸ்டண்ட் இயக்குநர் ஜாகுவார் தங்கம் வீடு தாக்கப்பட்டது. இதுகுறித்து ஜாக்குவார் தங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம், அஜீத் மேலாளர், தென் சென்னை மாவட்ட தலைவர், அஜீதின் உதவியாளர் (டச்சப் பாய்) மற்றும் 15க்கும் மேற்பட்ட தென் சென்னை அஜீத் மன்ற நிர்வாகிகள் ஆகிய அனைவரும் என்னையும், என் குடும்பத்தாரையும், என் சாதியைப் பற்றி கெட்ட வார்த்தையில் திட்டியும் உள்ளனர். கொலை செய்வேன் என்று மிரட்டிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த புகாரை ஏற்ற போலீசார் அஜீத் மேலாளர் உள்பட 18க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தையடுத்து திருவான்மியூரில் உள்ள அஜீத் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் அமிராமிபுரத்தில் உள்ள அஜீத்தின் அலுவலகத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இன்று போலீசார் ஜாக்குவார் தங்கம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். இதற்கிடையே தான் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜாக்குவார் தங்கம்,
நடிகர் அஜீத் மீது நேரடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை. அஜீத் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தனது ஆதரவாளர்களை திரட்டி, அஜீத் வீட்டை முற்றுகையிடுவேன். அஜீத்தை வேறு எங்கும் நடமாட விடாமல் செய்ய இருப்பதாகவும் ஜாக்குவார் தங்கம் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Most Recent