வடிவேலு புகார் எதிரொலி – சிங்கமுத்து உள்ளிட்ட 10 பேர் மீது புது வழக்கு

http://thatstamil.oneindia.in/img/2010/04/11-singamuthu200.jpg
சென்னை: நடிகர் வடிவேலு அலுவலகத்திற்குச் சென்று மிரட்டல் விடுத்தது தொடர்பாக நடிகர் சிங்கமுத்து, தயாரிப்பாளர் கண்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது சென்னை விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வடிவேலு, சிங்கமுத்து இடையே ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதுதொடர்பாக இரு தரப்பும் போலீஸில் புகார் செய்துள்ளன. வழக்குகளும் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் இந்த இரு தரப்புக்கும் இடையே புதிதாக ஒரு மோதல் வெடித்துள்ளது.

நடிகர் வடிவேலுவின் அலுவலகம் சாலிகிராமம், வேதவள்ளி தெருவில் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு எதிரே கண்ணன் என்பவரின் வீடு உள்ளது. இவர் ஒரு தயாரிப்பாளர். இவரது படத்தில் சிங்கமுத்து நடிப்பதாக தெரிகிறது.

கண்ணன் வீட்டில் நடந்த பிறந்த நாள் விழாவுக்கு வந்தபோது சிங்கமுத்துவுக்கு பட்டாசுகள் வெடித்து தடபுடலாக வரவேற்பு அளித்துள்ளனர். இதையடுத்து வடிவேலு தரப்பில் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் தரப்பட்டது. அதன் பேரில் வடிவேலு அலுவலகத்தற்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வடிவேலுவின் ஆதரவாளர்கள் தனது வீட்டுக்கு வந்து மாமனாரைத் தாக்கியதாக கண்ணன் போலீஸில் திடீரென புகார் கொடுத்தார். பதிலுக்கு வடிவேல் தரப்பில் சிங்கமுத்து உள்ளிட்டோர் வழக்கை வாபஸ் பெறக் கோரி மிரட்டுவதாக வடிவேலு தரப்பிலும் புகார் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் வடிவேலு தரப்பு கொடுத்த புகாரின் பேரில் சிங்கமுத்து, கண்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது விருகம்பாக்கம் போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.

Comments

Most Recent