உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டு, பஞ்சாயத்தார் தீர்ப்பின்படி ஊரை விட்டுத் துரத்தப்பட்டார் பிரபல இயக்குநர் ...
உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் பஞ்சாயத்தில் நிறுத்தப்பட்டு, பஞ்சாயத்தார் தீர்ப்பின்படி ஊரை விட்டுத் துரத்தப்பட்டார் பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
நிற்க. இது இப்போதுஅல்ல, பல வருடங்களுக்கு முன்பு நடந்த கதை. அந்தக் கதையைத்தான் இப்போது வெளுத்துக் கட்டு படமாக எடுத்துள்ளாராம் எஸ்.ஏ.சி.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளுத்துக்கட்டு என்ற படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சமீபத்தில் சென்சார் சான்றிதழ் கிடைத்தது. படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள் வாயாரப் பாராட்டினராம். நடிகர் விஜய்யும் கூட அப்பாவிடம் சந்தோஷப்பட்டு படம் நன்றாக வந்திருக்கு என்று சொன்னாராம். இப்படத்தில் தனது தாயார் ஷோபா பாடிய பாடலையும் விஜய் பாராட்டினாராம்.
இந்த நிலையில் வெளுத்துக்கட்டு படக் கதை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் எஸ்.ஏ.சி.
இதுகுறித்து அவர்கூறுகையில், இது எனது சொந்தக் கதை. எனக்கு 16 வயதிலேயே காதல் வந்து விட்டது. எனனை விட உயர்ந்த ஜாதிப் பெண்ணைக் காதலித்ததால் பஞ்சாயத்தில் கொண்டு போய் நிறுத்தி விட்டனர். அங்கு விசாரிக்கப்பட்ட பின்னர் நள்ளிரவில் ஊரை விட்டே துரத்தப்பட்டேன்.
திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தேன். வைராக்கியத்துடன் உழைத்தேன். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பின்னர்தான் சொந்த ஊருக்குப் போக வேண்டும் என பிடிவாதமாக இருந்தேன். இதன் காரணமாகத்தான் என்னால் 52 தமிழ்ப் படங்கள், 5 தெலுங்கு, 4 கன்னடம், 6 இந்திப் படங்களை என்னால் இயக்க முடிந்தது.
நான் சென்னைக்கு திருட்டு ரயில் ஏறி வந்தபோது எந்த பிளாட்பாரத்தில் தூங்கினேனோ, அதே இடத்தில் வெளுத்துக்கட்டு பட கதாநாயகனையும் படுக்க வைத்துப் படமாக்கினேன்.
எனது வாழ்க்கை மற்றவர்களுக்கு பாடமாக, உந்துசக்தியாக இருக்கட்டுமே என நினைத்தேன். அதைத்தான் வெளுத்துக்கட்டு படத்தில் கதையாக வைத்தேன் என்று கூறியுள்ளார் எஸ்.ஏ.சி.
Comments
Post a Comment